Monday, December 31, 2007

ஆஹா வந்திருச்சு! ஞாபகம் வந்திருச்சு

அதிகாலையில் கண் விழித்ததுமே மனசுல பல கேள்விகள் எழுந்தன.
இன்னிக்கு என்ன தேதி? ஆ.... 31 டிசம்பர் 2007.
என்னடா இது, இப்பதான், 2007 மலர்ந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள மலர் உதிரும் நேரமாயிடுச்சா? அடடா அவ்வளவு சீக்கிரம் நாட்கள் உருண்டோடிப் போயிடுச்சா?
சே சே ரொம்ப மோசமடா இந்த பூமிப்பந்து. இது தானும் உருண்டு, நம்மளையும்
இப்படிப் புரட்டி எடுக்குதே. ஹும்.....

சரி, இந்த காலத்து டிவி சேனலைப் போல, 2007ல் நாம என்ன சாதிச்சோம்னு பார்ப்போம். முதல்ல, வருட ஆரம்பத்தில் என்ன சூளுரை அதாங்க, எல்லாரும் மனசுக்குள்ள சொல்லிப்பாங்களே அதுதான். புரியலையா, சரி தெளிவா சொல்லட்டுமா
இது செய்ய மாட்டேன். அது செய்ய மாட்டேன் என்பது போல சபதங்கள்தான்.

ரொம்ப போரடிக்காம விஷயத்துக்கு வரேன். 2007ன் ஆரம்ப தினத்தன்று
என்ன சபதம் மனதுக்குள் செய்து கொண்டோம்? அதைக் கடைப்பிடித்தோமா என்று
எனது மன டைரியைப் புரட்டிப் பார்த்ததன் விளைவு இப்படி முளைத்தது.

ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும், இறுதியிலும் இந்த சுய ஆராய்ச்சி நடைபெறும்.
அந்த தருணம்தான் இது.

ஆமா, அது என்ன சபதம் எடுத்தோம்? பொய் பேசக்கூடாது என்றா? இல்லயே
அது நான்கு வருடங்களுக்கு முன்னராயிற்றே (பொய் இல்லங்க, நிஜம்தான்)
அப்பறம், புறம் பேசக்கூடாதுன்னா? இல்ல இல்ல, அதுவும் முடிஞ்சிருச்சே.
எப்பவும் இனிமையா எல்லோரிடமும் பேசணும்ட்டா? அதுவும் எடுத்தாச்சே.
இப்படியாக பல கேள்விகளும், அதற்குண்டான பதில்களுமே மாறி மாறி மனசுக்குள்
ஓட, ஓருவழியாக வந்தது, தலைவலிதான். அனாலும், இரண்டுமே விட்ட பாடில்லை.
அது என்ன இரண்டு? அதாங்க தலைவலியும், கேள்விகளும்.

இதற்கிடையில், இடைஞ்சல்கள் வேறு. முழுவதுமாக யோசிக்க விடாமல், அவ்வப்போது ஒலிக்கும் அழைப்பு மணிகள் காலிங் பெல்லும், டெலிபோன் பெல்லும்தான். ஒயாது ஒலித்து மேல்கொண்டு, மனக்குதிரையைப் பின்னால் ஓட விடாமல், இழுத்துப் பிடிக்கும் கடிவாளங்களாக செயல்படுகின்றனவே.

எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல், விடையும் கிடைக்காமல், என்ன இது,
திரிசங்கு சொர்க்கம் போல தவிப்பாக இருக்கிறதே. அப்படி இந்த வருட ஆரம்பத்தில்
என்னதான் சபதம் செய்தோம்?

வீட்டில், என்னுடைய இந்த தவிப்பைப் பார்த்த அங்கத்தினர் அவர்கள் பங்கிற்கு
நிறைய யோசனைகளை (எல்லாம் ரொம்பவே புதியதாக இருந்ததால், அதனை இனி வரும் வருடங்களுக்கு உதவும் என்ற காரணத்தினால், தணிக்கை செய்து விட்டேன்)
அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர். போற போக்கப்பார்த்தால், ஒரு தலைப்புச் செய்தியாக மாறி விடுமோன்னும் பயம் வந்தது. ஆனால், நான் செய்த அந்த ‘சபதம்’ மட்டும் நினைவுக்கு வராமல் படுத்தியது.

டிசம்பர் 31 கரைந்து கொண்டிருந்ததே தவிர, எதிலும் லயிப்பு இல்லாமல் மனது
தவித்தது. ஆனால், இது புரியாமல், எனது கணவரும், குழந்தைகளும் சந்தோஷமாக
ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர்.

என் தவிப்பு புரியாத என் மகள், அப்பா, அம்மாவையும் இந்த விளையாட்டில சேர்த்துக் கொள்ளலாமான்னு, ஓடி வந்து, என்னைக் கைப்பிடித்து இழுத்தாள்.
எதிர்பாராது இழுத்ததாலும், நாள் முழுவதும் யோசித்தும் விடை கிடைக்காத தவிப்பினாலும், மகள் மீது எரிச்சல் மிகுதியால், கோபம் கொண்டு சத்தம் போட,
மகளோ,
‘அம்மா நான் கண்டு பிடிச்சுட்டேன். உன் 2007ன் சபதம் என்னன்னு கண்டு
பிடிச்சுட்டேன்’ னு கைக்கொட்டி குதிக்க ஆரம்பித்து விட்டாள்.
‘அம்மா 2007ன் ஆரம்ப சபதம் கோபம் கொள்ளக்கூடாது என்பதுதானே’

அவளின் அந்த செய்கை சுரீர் என்று மனதில் உறைக்கவே, எனக்கு நானே
வெட்கிக் கொண்டேன்.

ஆனால், கணவரோ, ‘என்ன பானு, ஜனவரி 1, 2008 வரப்போறதே
இந்த வருடத்திய உன் சபதம் என்ன என்பதை, சத்தமாக இப்பவே எல்லோர்
முன்னாலும் சொல்லு. அப்பதான், வருடக்கடைசியில், தவிப்பில்லாமல்
சந்தோஷமாக இருக்கலாம்’ என்று கூற, அவருக்கு ஆமாம் போட்டனர்
குழந்தைகளும்.

நானோ, சளைக்காமல், சொன்னது

‘ஆஹா வந்திருச்சு, ஞாபகம் வந்திருச்சு,
2008ம் வந்திருச்சு, ஆனா சபதம் எடுக்காதேன்னு ஞானமும் வந்திருச்சு’

அனைவருக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tuesday, November 27, 2007

ஏற்றுமதி/இறக்குமதி - வங்கிகள் பங்கு என்ன?

சாதாரணமாக, நாம் ஏதாவது ஒரு பொருளை (துணிவகைகள், ப்ரிட்ஜ், டிவி, மிக்ஸி இது போல) வாங்க வேணுமானால், அதற்கான மதிப்பினை, பணமாகவோ, காசோலையாகவோ, கிரெடிட்கார்டு மூலமாகவோ அல்லது கடனிலோ ஈடு செய்கிறோம். இவற்றில் இரண்டாவதாகச் சொன்ன காசோலை கொடுத்து,(தற்போது இது அதிகம் பயன்படுவது இல்லை) பொருட்களை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இந்த மாதிரியான வர்த்தகத்தில், கடைக்காரருக்கு காசோலை பணமாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் வரையில் உத்திரவாதமில்லை. இந்த காசோலை பணமில்லாத காரணத்தினால், திரும்ப நேரிட்டால், அதற்கு உரிய காப்பு நடவடிக்கைகளைச் சட்டப்படி எடுக்க இயலும். (Negotiable Instrument Act - என்ற ஓன்று காசோலைகளின் பரிவர்த்தனைகளைக் கட்டுப் படுத்துகின்றது).

இதே போன்று, வர்த்தக நிறுவனங்களிடையே செய்யப்படுகிற வியாபாரங்களுக்கு ஆதாரமாக இருப்பது டாகுமென்டுகளே. எப்படி காசோலைகளுக்கென்று ஒரு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோ, அதே போன்று, இந்த மாதிரியான வர்த்தகப் பரிமாற்றங்களுக்காகவே,
“Uniform customs and Practice “ எனப்படும் நெறிமுறையினை வங்கிகள் பின்பற்றுகின்றன. இதில், ஏற்றுமதி/இறக்குமதி, எதுவாயினும், ஆதாரமான டாகுமென்டுகள் எப்படி இருக்க வேண்டும், அவை எப்படி நிறுவனங்களையும், சார்ந்துள்ள வங்கிகளையும் கட்டுப்படுத்துகின்றன போன்றவைகள் குறிப்பிடப் பட்டிருக்கும்.

இந்த டாகுமென்டுகள் பெரும்பாலும் சரக்குகளை வாங்கும் நிறுவனத்தின் பேரில்தான் வரையப்படும். எனவே, இதனை, சரக்குகள் ஏற்றுமதி செய்த பிறகு, நேரிடையாக அந்த நிறுவனத்துக்கே அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அயல் நாட்டில், இந்த நிறுவனமானது, டாக்குமென்டுகள் வந்து சேர்ந்ததுமே, சரக்குகளை வெகு சுலபமாக துறைமுகத்திலிருந்து தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு விடும்.அதன் பிறகு, அவர்கள் மனம் வைத்து சரக்குகளுக்கான மதிப்புத்தொகையை, ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பினால்தான் உண்டு.
இது, எவ்வாறு நிச்சயம்? சரக்குகளைக் கைப்பற்றிய பிறகு, எந்த நிறுவனம் பணத்தை செட்டில் (settle) செய்ய முன் வரும்?
ஆகவே, ஏற்றுமதியோ அல்லது, இறக்குமதியோ எதுவாக இருந்தாலும், டாகுமென்டுகளை வங்கிகள் மூலம் அனுப்புவதே சிறந்த முறையாகும்.

வங்கிகள் மூலம் அனுப்புவதால் என்ன பயன்? வங்கிகள் இந்த டாகுமென்டுகளை எப்படி கையாளுகின்றன?

இந்தியாவிலிருந்த, ஒரு ஏற்றுமதி நிறுவனம் (A)என்று குறிப்பிடுவோம்.
அயல் நாட்டு நிறுவனத்தை (B) என்று கொள்வோம்.
A நிறுவனம், ஒப்பந்தத்தின் பேரில், சரக்குகளைத் தயார் செய்து, அவற்றை Bயின் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த உடன், அதற்கான டாக்குமென்டுகளை, தனது வங்கியிடம் ஒப்படைக்கிறது.
வங்கியில் இந்த டாக்குமென்டுகளை, தனது புத்தகத்தில் அதற்குரிய பிரிவிற்கேற்ப தொடர்ச்சி எண்களை பதிவு செய்கிறது. கூடவே சம்பந்தப்பட்ட எல்லா டாக்குமென்டுகளிலும் தனது வங்கி முத்திரையைப்பதித்து, அந்த எண்ணினை அவற்றில் குறிப்பிடுகின்றது. இவ்வாறு செய்வதால், டாக்குமென்டுகளில் அந்த வங்கியின் அதிகாரம் இல்லாமல் எவரும் எதுவும் செய்ய இயலாது. குறிப்பாக,சரக்குகளை ஏற்றுமதி செய்ததற்கான டாகுமென்டில் (Shipping bill – Bill of lading or Air way bill) வங்கியின் ஒப்புதல் இருந்தால்தான், B நிறுவனமானது சரக்குகளை, துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.

ஆகவே, B நிறுவனமானது, சரக்குகளின் மதிப்பு மற்றும் வங்கிகள் குறிப்பிடும் இதர சிலவுகளுக்கான தொகையையும் சேர்த்து செலுத்திய பிறகே, டாகுமென்டுகளை சரியான வகையில் வங்கிகளின் ஒப்புதல் பெற்று, சரக்குகளைக் கைப்பற்ற முடியும். அவ்வாறு B நிறுவனம் செலுத்திய
பணமானது, வங்கிகளிடையே புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டு, வங்கிகள் மூலமாகவே, ஏற்றுமதி
செய்த A நிறுவனத்தின் கணக்கில் கொண்டுவரப் படுகிறது.

ஏற்றுமதி/இறக்குமதி, இவ்விரண்டிலுமே டாக்குமென்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உடலுக்கு உயிர் போல, டாக்குமென்டுகள் செயல்படுகிறது. டாக்குமென்டுகளில், ஏதாவது
தவறு இருந்தால், வங்கிகளும், தொடர்புடைய நிறுவனங்களும், சரக்குகளுக்கான மதிப்புத்
தொகையை தருவதில் சிக்கல்கள் ஏற்படும். அதனால்தான், வங்கிகள் தமது வாடிக்கையாளரின் நலனை மனதில் கொண்டு, தம்மிடம் ஓப்படைக்கப்படுகின்ற டாகுமென்டுகளை, மிக கவனத்துடன் பரிசீலனை செய்து அவற்றில் தவறுகளோ அல்லது மேலும் ஏதாவது டாகுமென்டுகள் தேவையானாலோ, தகுந்த ஆலோசனைகளைக் கூறி, ஆரம்பக் கட்டத்திலேயே நிவர்த்தி செய்கின்றனர்.

அந்நியச்செலாவணி

கற்காலம் முதல் தற்காலம் வரை, மனிதனின் தேவைகள் மாறாது, வித விதமாக அதிகரித்து வருகின்றதே தவிர குறைவதில்லை. ஒவ்வொரு நிலையிலும், தனது தேவைகளை ஏதாவதொரு வகையில் பெற்று சரி செய்து வந்திருக்கிறான். அந்த வகைளில்தான், பண்டமாற்று முறை ஏற்படுத்தப்பட்டது. அதனைச்சீர் திருத்தும் விதமாக நாணயங்கள் ஏற்படுத்தப் பட்டன. கடல் கடந்து வாணிபம் செய்து வந்த விபரங்கள் நாமெல்லோரும் அறிவோம். அந்த மாதிரி வாணிபங்களிலெல்லாம், பண்டமாற்று முறையும், நாணய பரிமாற்றங்களும் முக்கிய அங்கம் வகித்தன.

காலப்போக்கில், மனிதனின் தேவைகள் அதிகரிக்க, தேடல்களும் அதிகரித்து, பல அறிவியல் கண்டுபிடிப்புகளும் உதவி செய்ய, கலாச்சார மாற்றங்களும் ஏற்பட்டன. அதன் பிரதிபலிப்பாக, உலகில் பல வகையான நாணயப்புழக்கம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாடும், தனக்கென தனி அரசாங்கம், நிர்வாக அமைப்பு, நாணயம் என்று வித விதமாக மாறுதல்களைச் செய்தன. நம் நாட்டில் ரூபாய் என்றும், அமெரிக்காவில் அமெரிக்கடாலர் என்றும், இலண்டனில் ஸ்டெர்லிங்க்பௌன்ட் என்றும், ஐரோப்பிய நாடுகளில் யூரோ என்றும்,
புழக்கத்திலிருக்கும் நாணயத்தைக் கூறுவர்.

ஓரு நாட்டின் மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வாணிகத்தில் பணமாற்றம் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அதே வாணிபம் இரு வேறு நாடுகளுக்கிடையே நடந்தால், அங்கு, நாணய பரிமாற்றத்தில் ஓரு சமரச தீர்வு தேவைப் படுகிறது. அந்த சமரச தீர்வாக ஏற்படுத்தப் பட்டதுதான், ‘அந்நியச் செலாவணி’ அதாவது ஆங்கிலத்தில் “Foreign Exchange”. இப்படி ஒரு தீர்வினை அனைத்து முக்கிய நாடுகளும் ஓன்று கூடி, ஐக்கிய நாட்டு மன்றம், உலக வங்கி, இது போன்ற பல அமைப்பினை வடிவமைத்து, நாணய பரிமாற்றத்தில்
சீர்/நேர் படுத்தின. இந்த தீர்வுகள் உலக நாடுகளிடையே பரஸ்பர வர்த்தகம் நிறைவான வகையில் நடைபெறுவதற்கு அடிப்படையாகத் திகழ்கின்றது. ஐக்கிய நாடுகளுக்கிடையே நிலவும்
பொருளாதாரம், வர்த்தகத்தின் தன்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளின்
நாணயத்துக்கு, மற்ற நாடுகளின் நாணயத்தின் ஒப்புமை மதிப்பினைக் குறிப்பிடப்படுகிறது. இந்த
மதிப்பானது, தினமும் மாறுதலுக்குட்பட்டது. அதனால்தான், அந்நியச்செலாவணியில், மதிப்பு மாறுபாட்டால், பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால், நன்கு தேர்ந்த தொழிலதிபர்கள், இந்த மாதிரி
பாதிப்புகள், தமது வர்த்தகத்தில் ஏற்படாத முறையில் செயல்பட்டும் வருகின்றனர்.

Tuesday, November 6, 2007

ஏற்றுமதி-இறக்குமதி --- அந்நியச் செலாவணியின் பங்கு

அந்நியச் செலாவணி என்றால் என்ன?

இந்தியாவில், நாம் செலவு செய்யும் போது, வெகு சுலபமாக நமது இந்திய ரூபாயில் மதிப்பிட்டு, கணக்கிடுகிறோம். இதே மாதிரி அயல் நாடுகளிடையே வணிகப்பரிமாற்றத்தின் போது ஏற்படும்

நாணய மதிப்பீடே ‘அந்நியச் செலாவணி’ என அழைக்கப் படுகிறது. இந்த அந்நியச் செலாவணியின் மதிப்பீடு ஓவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும். இது நிலையாக இருப்பதில்லை. அன்றாட உலக வர்த்தகத்திற்குத் தகுந்தாற் போல மதிப்பு ஏறும். அல்லது இறங்கும்.

சாதாரணமாக, தனி ஒரு நபரினை இது பாதிப்பது இல்லை. ஆனால், ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப் பட்ட வணிக நிறுவனமாக இருப்பின், நமது ரூபாயின் மதிப்பு மாறுபடுமானால், மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

சில சமயங்களில், நன்றாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் நலிவடைந்த நிறுவனமாக மாற நேரிடும்.

ஏற்றுமதி அல்லது இறக்குமதி போன்ற வியாபாரங்கள் பெரும்பாலும், அறிமுகமில்லாத நிறுவனங்களுக்கிடையே நடைபெறுவதில்லை. ஏதாவது ஒரு வகையில் உத்திரவாத அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. இவற்றில் முக்கிய பங்குவகிப்பவர்கள்:

இடைத் தரகர்கள்

சகோதர நிறுவனங்கள் (அவர்களுக்குள் ஏற்கெனவே பரிச்சயமாகி இருந்தால்)

வங்கிகள்

மேற்கண்டபடி வியாபார ஒப்பந்தத்தில் சரக்குகளின் அளவு, தரம், விலை, மற்றும் காலவரம்பு முதலியன தீர்மானிக்கப்பட்டு வரையறுக்கப்படுகின்றது.

சரக்குகள் தயாரான பிறகு, தேவையான அடிப்படை டாகுமென்டுகள் என்னென்ன?
Bill of Exchange எனப்படுகிற உண்டியல் (இது ஒண்ணும் கோயில்களில் காணிக்கை போடுகிற உண்டியல் இல்லீங்க) இதில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள், சரக்குகளுக்கான மதிப்புத் தொகையை கொடுபட வேண்டியதற்கான ஓலை.

Invoice -இதில் அனுப்பும் சரக்கின் அளவு, விலை, தரம், எடை போன்ற தகவல்கள் குறிக்கப் பட்டு,மொத்த சரக்கின் மதிப்பும் கணக்கிட்டு காட்டப் பட்டிருக்கும்.

Certificate of Origin.

Bill of Lading or AirwayBill -அதாவது சரக்கினை கப்பலிலோ அல்லது விமானத்திலோ ஏற்றி அனுப்பியதற்கான அத்தாட்சிச் சான்றிதழ்.

சரக்குகளின் மதிப்புக்குத் தக்கான காப்பீடு சான்றிதழ்

இந்த நிறுவனங்கள் தமது அயல் நாட்டு வர்த்தகங்களை முழுக்க முழுக்க வங்கிகளையே நம்பி ஈடுபடுகிறார்கள். சரக்குகளை ஏற்றுமதி செய்தாலும், அவற்றை வங்கிகளின் ஒப்புதல் இருந்தால்தான், வெளியே எடுத்து வர இயலும். இதற்குத்தான் மேலே சொன்ன டாகுமென்டுகள் உதவுகின்றன.

ஏற்றுமதிகள் இரு வகைகளில் நடைபெறுகிறது. முதலாவது நம்பிக்கையின் பேரில், இரு நிறுவனமும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி சரக்குகளை அனுப்புதல்.

அடுத்தது, Letter of credit அடிப்படையில் அனுப்புவது.

இருவகைகளிலும், சரக்குகளை ஏற்றுமதி செய்த பிறகு, தயாராக இருக்கும் டாகுமென்ட்களை வங்கிகள் மூலமாக அனுப்புவதுதான் சிறந்தது. இதுதான் நடைமுறையிலும் இருக்கிறது. அப்போதுதான், 100% பணத்தினை வரவு செய்ய முடியும்.

முதலாவது வழியில் (அதாவது ஒப்பந்தத்தின் படி) ஏற்றுமதி செய்தால், டாகுமென்டுகளை வங்கி கணக்கில் எடுத்த நாளிலிருந்து 30 நாட்களில் பணம் வந்து விடும்.

Letter of credit ன் அடிப்படையில் ஏற்றுமதி செய்தால், டாகுமென்டுகள் சரியாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக, பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். ஆனால் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு அன்றைய நிலவரப்படி பணமாற்று நிர்ணயிக்கப்படும். இது உலக சந்தையில் நமது ரூபாயின் மதிப்பைப் பொறுத்து அமையும்.

ஏற்றுமதியாளர்களின் பெருங்கவலை, இந்த அந்நியசெலாவணி பணமாற்றம் தான். அது அவர்களுக்கு அனுகூலமாக அமைந்தால் மகிழ்ச்சிதான். (நான் பல ஏற்றுமதியாளர்களின் மலர்ந்த முகங்களை எனது பணியின் போது பார்த்திருக்கிறேன்).

அன்றாட மதிப்பு வேறுபாடு, அந்நிய செலாவணியில் தவிர்க்க முடியாத ஒன்று. இதிலிருந்து மீளும் முகமாகத்தான், “Forward Contract” என்று சொல்லப்படுகின்ற வருங்கால மதிப்பு மாறுபாட்டுக்கான காப்பு வசதியினையும் வங்கிகள் ஏற்படுத்தித் தருகின்றன. இது அந்நிய செலாவணி மதிப்பு மாறுபாட்டால் ஏற்படுத்தும் எதிர்பாராத இழப்பிலிருந்து ஏற்றுமதி/இறக்குமதியாளர்களைக் காக்கின்றது.

அந்நிய செலாவணி நிலவரம் சாதகமாவது போல இருந்தால், அந்த சமயத்திற்குத் தக்கபடி, தம்முடைய செயல்பாட்டினை மாற்றிக்கொள்ளும் நிர்வாகத்திறமையும் அவசியமாகும்.

வணக்கம்

வங்கியிலிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு, பழக்க தோஷத்தினால் வீட்டில் தூசு தட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கைகளில் வலைப்பதிவைப் பற்றியும், வலைப்பதிவாளர்களைப் பற்றியும் படிக்க நேரிடும் போதெல்லாம், என் மனதிலும் அது போன்று பதிவு துவங்கும் ஆவல்
ஒரு கனாவைப் போல வந்து போகும். கனவும் பலித்தது. நிஜமானது. ஆனால் அதற்கு நான்கு மாத காலம் தேவைப்பட்டது. கனவு நனவாக்க் காரணம், நான்கு மாதங்களுக்கு முன், சென்னையில் வலைப்பதிவாளர்கள் சேர்ந்து நடத்திய 'வலைப்பட்டறையே'.

வலைப்பட்டறைமீதும், வலைப்பதிவாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து இந்த பதிவைத் துவக்கி
வைக்கிறேன்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.