Tuesday, November 27, 2007

அந்நியச்செலாவணி

கற்காலம் முதல் தற்காலம் வரை, மனிதனின் தேவைகள் மாறாது, வித விதமாக அதிகரித்து வருகின்றதே தவிர குறைவதில்லை. ஒவ்வொரு நிலையிலும், தனது தேவைகளை ஏதாவதொரு வகையில் பெற்று சரி செய்து வந்திருக்கிறான். அந்த வகைளில்தான், பண்டமாற்று முறை ஏற்படுத்தப்பட்டது. அதனைச்சீர் திருத்தும் விதமாக நாணயங்கள் ஏற்படுத்தப் பட்டன. கடல் கடந்து வாணிபம் செய்து வந்த விபரங்கள் நாமெல்லோரும் அறிவோம். அந்த மாதிரி வாணிபங்களிலெல்லாம், பண்டமாற்று முறையும், நாணய பரிமாற்றங்களும் முக்கிய அங்கம் வகித்தன.

காலப்போக்கில், மனிதனின் தேவைகள் அதிகரிக்க, தேடல்களும் அதிகரித்து, பல அறிவியல் கண்டுபிடிப்புகளும் உதவி செய்ய, கலாச்சார மாற்றங்களும் ஏற்பட்டன. அதன் பிரதிபலிப்பாக, உலகில் பல வகையான நாணயப்புழக்கம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாடும், தனக்கென தனி அரசாங்கம், நிர்வாக அமைப்பு, நாணயம் என்று வித விதமாக மாறுதல்களைச் செய்தன. நம் நாட்டில் ரூபாய் என்றும், அமெரிக்காவில் அமெரிக்கடாலர் என்றும், இலண்டனில் ஸ்டெர்லிங்க்பௌன்ட் என்றும், ஐரோப்பிய நாடுகளில் யூரோ என்றும்,
புழக்கத்திலிருக்கும் நாணயத்தைக் கூறுவர்.

ஓரு நாட்டின் மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வாணிகத்தில் பணமாற்றம் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அதே வாணிபம் இரு வேறு நாடுகளுக்கிடையே நடந்தால், அங்கு, நாணய பரிமாற்றத்தில் ஓரு சமரச தீர்வு தேவைப் படுகிறது. அந்த சமரச தீர்வாக ஏற்படுத்தப் பட்டதுதான், ‘அந்நியச் செலாவணி’ அதாவது ஆங்கிலத்தில் “Foreign Exchange”. இப்படி ஒரு தீர்வினை அனைத்து முக்கிய நாடுகளும் ஓன்று கூடி, ஐக்கிய நாட்டு மன்றம், உலக வங்கி, இது போன்ற பல அமைப்பினை வடிவமைத்து, நாணய பரிமாற்றத்தில்
சீர்/நேர் படுத்தின. இந்த தீர்வுகள் உலக நாடுகளிடையே பரஸ்பர வர்த்தகம் நிறைவான வகையில் நடைபெறுவதற்கு அடிப்படையாகத் திகழ்கின்றது. ஐக்கிய நாடுகளுக்கிடையே நிலவும்
பொருளாதாரம், வர்த்தகத்தின் தன்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளின்
நாணயத்துக்கு, மற்ற நாடுகளின் நாணயத்தின் ஒப்புமை மதிப்பினைக் குறிப்பிடப்படுகிறது. இந்த
மதிப்பானது, தினமும் மாறுதலுக்குட்பட்டது. அதனால்தான், அந்நியச்செலாவணியில், மதிப்பு மாறுபாட்டால், பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால், நன்கு தேர்ந்த தொழிலதிபர்கள், இந்த மாதிரி
பாதிப்புகள், தமது வர்த்தகத்தில் ஏற்படாத முறையில் செயல்பட்டும் வருகின்றனர்.

No comments: